2014ல் ஐந்து படங்கள் - புதிய வேகத்தில் சிம்பு



சிம்புவைப் பொறுத்தவரை 2013 சரியில்லாத ஆண்டு. 2012ல் வெளியான 'போடா போடி' படத்தினைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் 2013ல் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. ‘வாலு’, ‘வேட்டை மன்னன்’ ஆகிய படங்கள் தயாரிப்பில் இருந்தாலும், எப்போது வெளியாகும் என்பது தெரியாமல் இருந்து வந்தது. சிம்புவை வைத்து படமெடுத்தால் அது அத்தனை சீக்கிரத்தில் முடியாது என்ற பேச்சு கோலிவுட்டில் பரவும் நிலையும் ஏற்பட்டது. ஆனால் இந்த சறுக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முழு வேகத்துடன் தயாராகி விட்டார் சிம்பு.

2014ல் முதலில் ‘வாலு’, ‘இங்க என்ன சொல்லுது’ (கெஸ்ட் ரோல்), பாண்டிராஜ் இயக்கும் படம், கெளதம் மேனன் இயக்கும் படம், செல்வராகவன் இயக்கும் படம் என்று அடுத்த ஆண்டில் ரவுண்டு கட்டி அடிக்க அவர் திட்டம் தீட்டியுள்ளார். இது அவரது ரசிகர்களையும் உற்சாகப் படுத்தியுள்ளது.

சிம்புவின் இந்தப் பட வரிசையில் 2012 தீபாவளி வெளியீடு என்று அறிவிக்கப்பட படமான ‘வாலு’ தற்போது தான் இறுதிகட்டத்தை எட்டி இருக்கிறது. முன்னணி நடிகர்களின் கால்ஷீட் பிரச்சினைகள் என பல்வேறு காரணங்களால் தாமதம் ஆன படத்தில் தற்போது இரண்டு பாடல்கள் மட்டுமே பாக்கி. அதனை முடித்து விட்டு சிம்பு பிறந்த நாளன்று ( பிப்ரவரி 3) படத்தினை வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. ‘வேட்டை மன்னன்’ படத்தின் நிலைமை மட்டும் புரியாத புதிராக இருக்கிறது.

சிம்பு அடுத்ததாக கவனம் செலுத்துவது பாண்டிராஜ் இயக்கும் படம். சிம்புவே தயாரிக்கும் இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. சிம்புவிற்கு ஜோடியாக இப்படத்தில் நயன்தாரா நடிப்பதால் விநியோகஸ்தர்கள் இடையே இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கும்போதே கௌதம் மேனனின் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு. பல்லவி சுபாஷ் நாயகி, ஏ.ஆர்.ரஹ்மான் இசை என இப்படத்திற்கும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது. ‘விண்ணைத்தாண்டி வருவாயா' கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால், இப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா 2' என்று செய்திகள் பரவியது. ஆனால் இப்படம் ஒரு காதல், ஆக் ஷன் கலந்த கதை. ‘விண்ணைத்தாண்டி வருவாயா 2' அல்ல என்று அறிவித்தது படக்குழு.

கெளதம் மேனன், பாண்டிராஜ் என இருவரது படங்களிலும் மாறி மாறி நடித்து வரும் சிம்பு, செல்வராகவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது. ‘இரண்டாம் உலகம்’ படத்தின் தோல்வியில் இருந்த செல்வராகவன், சிம்புவை சந்தித்து கதை ஒன்றை கூறவே, உடனே அதில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் சிம்பு. இப்படத்தை ராடியன்ஸ் மீடியா நிறுவனத்தின் வருண் மணியன் தயாரிக்க இருக்கிறார். பிப்ரவரி 2014 முதல் படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. இப்படத்திற்கு யுவன் இசையமைப்பார் என்று செய்திகள் வெளியாகியுள்ளது. படங்கள் ஒருபுறம் இருக்க 2014ல் ‘லவ் ஆன்தம்’ என்ற ஆல்பத்தையும் வெளியிட சிம்பு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

2014ல் தொடர்ச்சியாக சிம்பு படங்கள் வெளிவர இருப்பதால், அவரது ரசிகர்கள் ட்விட்டர் தளத்தில் சிம்புவிற்கு வாழ்த்துகளை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள். மொத்தத்தில் தன்னைப் பற்றிய வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து 2014ம் ஆண்டு தன்னுடையது என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார் சிம்பு.


Published In THE HINDU (TAMIL) Daily Tamil News Paper Dated 15-December-2013

No comments:

Post a Comment